ஜார்ஜ் டவுன்: பினாங்கில் சிறு மற்றும் குறு தொழில் செய்யும் மலேசிய இந்திய வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கப்படும் SPUMI நிதித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
SPUMI நிதித் திட்டம் மூலம் புதிதாகத் தொழில் தொடங்கலாம் அல்லது தொழிலை மேம்படுத்தலாம்.
இதுகுறித்து பினாங்கின் வீடு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் சுந்தரராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
“தொழில் அமைச்சின் கீழ் SPUMI நிதித் திட்டம் செயல்படுகிறது. அது சிறிய அளவில் தொழில் செய்யும் வர்த்தகர்களுக்கு முதலீடு வழங்குகிறது. அதேபோல் நிதிச் சிரமங்களை எதிர்நோக்கும் சிறு தொழில் வர்த்தகர்களுக்கு உதவிகள் கிடைக்கும்,” என்றார் திரு சுந்தரராஜூ.
“மலேசிய இந்தியச் சமூகத்தினர், தேயிலை விற்பது உள்ளிட்ட பல சிறிய அளவிலான தொழில்களைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவித் திட்டங்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. உதவித் திட்டங்கள் குறித்த செய்திகளை இப்போது மக்களிடம் கொண்டு செல்கிறோம்,” என்றார் அவர்.
நிதி உதவித் திட்டங்கள் குறித்த விவரங்களை மக்களிடம் கட்டங்கட்டமாக கொண்டுசேர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் திரு சுந்தரராஜூ கூறினார்.

