பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம் சுற்றுப்பயணத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் அதிகமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடுவதாக அந்நாட்டுப் பிரதமர் சிரேத்தா தவிசின் கூறியிருக்கிறார்.
தாய்லாந்துக்கு அனைத்துலகக் கலைஞர்களை ஈர்க்கும் முயற்சிகளும் அவற்றில் அடங்கும்.
அரசாங்கக் கருத்தரங்கு ஒன்றில் பேசியபோது, சுற்றுப்பயணத் துறை அடுத்த நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் மேம்பாடு காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
கிருமிப்பிரவல் காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டுவர தாய்லாந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட்டின் கலைநிகழ்ச்சியை திரு சிரேத்தா குறிப்பிட்டுச் சொன்னார். அதற்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்று முடிந்துவிட்டன.
தாய்லாந்தும் அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்றார் அவர்.
“நாம் பிரபலங்களையும் உலகத் தரம்வாய்ந்த நிகழ்ச்சிகளையும் தாய்லாந்துக்குக் கொண்டுவரலாம். இது நிச்சயம் செய்யப்படவேண்டும்,” என்று திரு சிரேத்தா கூறினார்.
அரசாங்கம் விசா தேவையில்லாத பயணங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார். அதோடு, கலைநிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்தும் விதிமுறைகளும் கேளிக்கை இடங்களின் செயல்பாட்டு நேரங்களும் மாற்றப்படும் என்றும் திரு சிரேத்தா தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகள் மூலம் வரும் வருமானத்தை ஈர்க்கும் முயற்சியில் சீனா, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் குடிமக்கள் விசா கொடுக்க தேவையில்லை என்று தாய்லாந்து கூறியுள்ளது.