லண்டன்: ஈரான்மீது நடத்திய தாக்குதலுக்குத் தனது டியெகோ கார்சியா தளத்தைப் பயன்படுத்தும்படி அமெரிக்கா கோரிக்கை விடுக்கவில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. இருப்பினும் தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுபற்றி அமெரிக்க தெரிவித்துவிட்டதாகப் பிரிட்டனின் மூத்த அமைச்சர் ஜோனதன் ரெய்னால்ட்ஸ் கூறினார்.
பிரிட்டன் அதன் ராணுவத்தை அந்த வட்டாரத்துக்கு அனுப்பியுள்ளது என்றும் தனது முக்கிய நட்பு நாடுகள் அச்சுறுத்தப்பட்டால் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று திரு ரெய்னால்ட்ஸ் சொன்னார்.
அதோடு பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் நட்பு நாடுகளுடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை,” என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கூறினார்.
“பிரிட்டிஷ் ராணுவத் தளங்களால், டியேகோ கார்சியா அல்லது ஆர்ஏஎஃப் அக்ரோடிரி தளங்களைப் பயன்படுத்தும்படி கோரிக்கை வரும். ஆனால் இது அப்படிப்பட்ட சூழல் அல்ல,” என்றார் திரு ரெய்னால்ட்ஸ்
தாக்குதல் பற்றி முன்னரே பிரிட்டனுக்குத் தகவல் கிடைத்துவிட்டது என்று திரு ரெய்னால்ட்ஸ் சொன்னார்.
“துல்லியமாக எப்போது தகவல் கிடைத்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததுபோல எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்றார் அவர்.