இஸ்ரேலியர்களுக்கான தடை தொடர்பில் நெருக்குதலுக்கு அடிபணியமாட்டோம்: அன்வார்

இஸ்ரேலியர்களுக்கான தடை தொடர்பில் நெருக்குதலுக்கு அடிபணியமாட்டோம்: அன்வார்

1 mins read
45c8c7ca-902d-4cc6-9325-d008527a3b0e
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: பெர்னாமா

சிரம்பான்: தங்கள் நாட்டுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைய பற்பல ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் தடையை மாற்றிக்கொள்ள அளிக்கப்படும் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணியாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புதன்கிழமை (ஜூலை 22) கூறினார்.

அந்தக் கொள்கை எந்த அனைத்துலகச் சட்டத்துக்கும் புறம்பானது அல்ல என்று திரு அன்வார் சொன்னார்.

“அமெரிக்க அரசியல் தலைவர்களிடம், குறிப்பாக மலேசியா அனைத்துலகச் சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொள்வதாகவும் நாடுகளின் உரிமைகளை மதிக்கவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறும் சிலரிடமாவது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

“இது மிகவும் முட்டாள்தனமானது. காரணம், எங்களைப் பொறுத்தவரை மலேசியா இந்தக் கொள்கையைப் பற்பல ஆண்டுகளாகப் பின்பற்றிவருகிறது. நாங்கள் இஸ்ரேலியக் குடிமக்கள் இங்கிருப்பதை எதிர்க்கிறோம், யூதர்களை அல்ல. பாலஸ்தீனத்தையும் காஸாவையும் தங்களின் காலனிகளாக மாற்றுவது, அவற்றில் கொலை, குற்றங்கள், தொடர் அடக்குமுறை ஆகியவற்றுக்கு இஸ்ரேலியக் குடிமக்கள் துணைபோவது அதற்குக் காரணம்,” என்றார் திரு அன்வார்.

இஸ்ரேலிய குடியுரிமையை உள்ளடக்கிய இருநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்படவேண்டும் என்று திரு அன்வார் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து வா‌ஷிங்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளியல் தொடர்புகள் மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) குரல் கொடுத்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஇஸ்ரேல்பாலஸ்தீனம்காஸாஅமெரிக்கா