ஷங்காய்: சீனாவின் ஷங்காய் நகரின் விமான நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் முக அடையாள முறையைக் கடக்க தனது முக ஒப்பனையைக் கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் பதிவானதாக நம்பப்படும் காணொளி சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. அதில் அந்தப் பெண் தனது முக ஒப்பனையைக் கலைப்பது தெரிகிறது. அப்போது பெண்ணின் நண்பர் அவரைத் திட்டுவதும் தெரிகிறது.
“அடையாள அட்டையில் இருக்கும் படத்தில் இருப்பதைப் போல் உனது முகம் தென்படும் வரை அதைக் (முக ஒப்பனை) கலைத்துவிடு,” என்று நண்பர் கூறுவது கேட்கிறது.
“எதற்காக இவ்வளவு முக ஒப்பனையைப் பூசிக்கொண்டிருக்கிறாய்?” என்றும் அந்த நண்பர் கேட்பதும் தெரிகிறது
இச்சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்ததாக சம்பந்தப்பட்ட பெண்ணின் விமான நுழைவு அட்டை (boarding pass) மூலம் தெரிகிறது என்று மதர்ஷிப் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பெண்ணைத் திட்டும் நண்பருக்கு எதிராக இணையவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். வேறு சிலர், முக ஒப்பனை காரணமாக முக அடையாள முறை சரியாக செயல்படாமல் இருக்கக்கூடாது என்று சாடினர்.