கோத்தா கினபாலு: இண்டா பெர்மாய் பகுதியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) அதிகாலை பல இடங்களில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்த காவல்துறை, அதன் தொடர்பில் நால்வரைக் கைதுசெய்தனர்.
சம்பவம் நடந்த அன்று குயின் எலிசபெத் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளூர்வாசியான 71 வயது முதியவர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கோத்தா கினபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் சையத் லாட் சையத் அப் ரகுமான் கூறினார்.
அவரைத் தொடர்ந்து செபாங்கர் பகுதியில் 19 வயது இளையர் ஒருவரும் அன்றைய தினம் இரவு வேளையில் காவல்துறை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 15ஆம் தேதி, செபாங்கர், இனானாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29, 21 வயதுடைய இரு உள்ளூர் பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், அவ்விரு பெண்களும் மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முதியவரின் மகள்கள் என்றும் கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் திரு சையத் லாட் விவரித்தார்.

