நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்து போட்டித் தொடரை ஏற்பாடு செய்யும் ஃபிஃபா அமைப்பு, போட்டிகள் நடைபெறும் விளையாட்டு அரங்குகளுக்குள் மறுபயனீடு செய்யக்கூடியத் தண்ணீர் புட்டிகளை (போத்தல்) பார்வையாளர்கள் கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளதாக ‘தி அதலெட்டிக்’ ஊடகம் புதன்கிழமை (ஜூன் 3) செய்தி வெளியிட்டுள்ளது.
கடைசி நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள இத்தடை, ஆட்டங்களைக் காண வரும் ரசிகர்களை அரங்குகளில் உள்ள கடைகளில் குடிநீரை வாங்கிப் பருக கட்டாயப் படுத்தும் என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு மே மாதம் வரையில் ஃபிஃபா வெளியிட்ட விதிமுறைகளில் ஒரு லிட்டர் குடிநீரை நிரப்பக்கூடிய மறுபயனீட்டுப் புட்டிகளை அரங்குகளுக்குக் கொண்டு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டது.
ஆனால் அந்த விதிமுறைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டதாக தி அதலெட்டிக் ஊடகம் அதன் செய்தியில் தெரிவித்தது.
காற்பந்து ரசிகர்கள், விளையாட்டாளர்கள், நடுவர்கள், தொண்டர்கள், ஊழியர்கள் என போட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஃபிஃபா அமைப்பின் பேச்சாளர் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வெப்பம் தணிக்க மாற்று ஏற்பாடுகள்
2025ல் அமெரிக்காவில் நடந்த வேறு காற்பந்து போட்டிகளிலும் இதே விதி பின்பற்றப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். அரங்குகளில் கட்டுப்படியான விலையில் குடிநீர் விற்கப்படும் எனவும், ரசிகர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு உள்அமைப்புகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

