துபாய்: உலகிலேயே முதன்முறையாக துபாயில் நீருக்கடியில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 55 மில்லியன் திர்ஹம் (S$20.45 மில்லியன், ரூ.122.2 கோடி) செலவில், மூன்று தளங்களுடன் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. முதல் தளம் தொழுகைக் கூடமாகச் செயல்படும். இது நீருக்கடியில் அமைந்துள்ளது.
இரண்டாம் தளம் பன்னோக்குக் கூடமாகச் செயல்படும். மூன்றாம் தளத்தில் இஸ்லாமியக் கண்காட்சி இடம்பெறும்.
ஒரே நேரத்தில் 50 முதல் 75 பேருக்குச் சேவையளிக்கக்கூடிய இப்பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்று ‘கல்ஃப் நியூஸ்’ தெரிவித்தது.
ஆன்மிக அமைதிக்கும் கலாசாரச் செறிவிற்கும் இது ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும் எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆன் வரலாற்றைக் காலப்பெட்டகமாகக் காட்டும் குர்ஆன் கண்காட்சியும் இப்பள்ளிவாசலில் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.