வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் அவரது மனைவிக்கும் செப்டம்பர் 24ஆம் தேதி அரசு விருந்து அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா ஒரு வலுவான போட்டியாளராக இருந்தாலும், அதிபர் ஜின்பிங்குடன் தமக்குச் சிறந்த வணிக உறவும் நன்மதிப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்ற தமது கோரிக்கையைச் சீனா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்நாடு இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.
“அவர் சிறந்த மனிதர், அவர் தமது அழகான மனைவியுடன் வருகிறார். அவர் மிக அழகானவர், சிறந்த பெண். உலகத்தால் மதிக்கப்படுபவர்,” என்று அவர் வருணித்தார்.
இதனிடையே, செப்டம்பர் 24 சந்திப்பின்போது அதிபர் ஜின்பிங்குடன் சீன நிறுவனங்களின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய மிகப்பெரிய வணிகக் குழுவும் அமெரிக்கா செல்ல உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுத் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு நிறுவனங்கள் மீது சீனா மேற்கொண்ட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, அந்நாட்டு அதிபர் வணிகக் குழுவினருடன் வெளிநாடு செல்வது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக வெள்ளை மாளிகைக்குச் சில சாத்தியமான பொருளியல் நன்மைகளை வழங்கும் வேளையில், அமெரிக்காவுடனான முதலீடு, வணிக உறவுகளை மேம்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம் என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சீன மின்சார வாகனங்களுக்கு 100 விழுக்காடு வரி விதிப்பு, ‘டிக்டாக்’ செயலி மீதான தடை, ஆளில்லா வானூர்தி உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருள்களின் இறக்குமதிக்குத் தடை எனப் பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையிலும், 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிபர் ஜின்பிங் மிகப்பெரிய வணிகக் குழுவுடன் அமெரிக்கா செல்கிறார்.இது இருநாடுகளிடையேயான முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.


