பெய்ஜிங்: சீன-அமெரிக்க வர்த்தகக் குழுவின் பொன்விழாவையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் சீனாவின் நவீனமயமாதல் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் எனக் கூறியிருந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தக் கடிதம் வாஷிங்டனில் நடந்த விருந்தில் வாசிக்கப்பட்டது என்றும் அப்போது அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லென் பெய்ஜிங்கின் பொருளியல் நடவடிக்கைகள் நியாயமற்றவை எனச் சாடினார் என்றும் கூறப்பட்டது.
சீனாவில் நிலவும் வணிகச் சூழல் நியாயமற்ற முறையில் இருப்பதாக நீண்ட காலமாக அமெரிக்க நிறுவனங்கள் புகார் கூறி வருகின்றன.
சீனாவில் அறிவுசார் சொத்துகளுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும் போட்டித்தன்மைமிக்க உள்நாட்டு வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்க நிறுவனங்கள் குற்றம் சாட்டின.
ஆனால் சீன அதிபர் தன் கடிதத்தில்,”சீனா உலகிலுள்ள அனைத்து நாட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கும். சந்தை சார்ந்த, சட்ட விதிமுறைகள் அடிப்படையிலான, அனைத்துலக வணிகச் சூழலை உருவாக்கும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.