மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு இளையர்களுக்காக ‘தமிழில் யோசி, தமிழில் வாசி’ என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்பு, தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு பிரிவு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்ச்சி ஜூலை 13, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும்.
உலகமயமாக்கப்பட்ட இவ்வுலகத்தில் மொழிபெயர்ப்புத் திறன் முக்கிய ஆற்றலாகத் திகழ்கிறது. ஆகையால் இந்நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இளையர்கள் செய்திகளை மொழிபெயர்க்க கற்றுக்கொள்வார்கள்.
15 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சி இலவசமாக நடைபெறுகின்றது.
இளையர்கள் செய்திகளை மொழிபெயர்ப்பு செய்வதற்கான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள இப்பயிற்சி உதவும்.
மேலும் தமிழ்ச் சொற்களை அதிகம் தெரிந்துகொள்ளவும், தமிழில் மேலும் சரளமாகப் பேசவும் இது உதவியாக அமையும்.
செய்திகளை சிறப்பாக மொழிபெயர்க்கும் இளையர்களுக்கு மீடியாகார்ப் நிறுவனத்தில் தொலைக்காட்சி, வானொலி அல்லது மின்னிலக்க தளங்களில் ஒரு செய்திப் பகுதியை வழங்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
மேல் விவரங்களுக்கு மீடியாகார்ப் செய்தி இணையத்தளத்தை நாடலாம்.