புதுடெல்லி: அண்மையில் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.1.11 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இரு நாடுகளிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் சென்றடைந்த முதல்வர் யோகிக்கு அங்கு நெற்றியில் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
அவரது பயணத்தின் முதல் நாளில் முன்னணி முதலீட்டு நிறுவனமான மிட்சுய் அண்ட் கோ நிர்வாகத்தினரை முதல்வர் யோகி சந்தித்தார். அப்போது உத்தரப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விரிவாக விவரித்தார்.
குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய சக்தி, உயிரி ஆற்றல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் ஆகிய நான்கு துறைகளில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உத்தரப் பிரேதச அரசு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், இந்தியாவின் ஆகப்பெரிய நுகர்வோர் சந்தையாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில் சிறந்த இணைப்பு, சிறந்த வழித்தடங்கள், விரைவுச் சாலை வலையமைப்பு, தொழில்துறை வாய்ப்புகள் என முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் உதவிகளையும் வழங்க தமது அரசு தயாராக உள்ளதாக முதல்வர் யோகி உறுதியளித்ததை அடுத்து, பல்வேறு ஜப்பானிய நிறுவனங்களுடன் சுமார் ரூ.11,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
குபோடா கார்ப்பரேஷன், மிண்டா கார்ப்பரேஷன், ஜப்பான் ஏவியேஷன் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
உத்தரப் பிரதேசத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

