இந்த ஆண்டு மட்டுமே பல்வேறு நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது மட்டுமல்லாமல் பெரிய அளவிலான, பிரம்மாண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ராயல் கிங்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து சமூகத் தலைவர்களுக்கு சிறப்பு செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, மார்ச் மாதம் 19ஆம் தேதி சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள தி சென்ச்சூரியன் கட்டடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் எட்டுப் பேருக்குத் தலா $100 வழங்கி, குறைந்த வருமானமுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்டு சிறப்பித்த அந்த நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் டாக்டர் சையத் ஹாருன் அல்ஹப்ஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக, மார்ச் 8ஆம் தேதி சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கும் ராயல் கிங்ஸ் முழு ஆதரவை வழங்கியது.
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் ஏற்பாட்டில் மார்ச் 6ஆம் தேதி நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளர் ராயல் கிங்ஸ்.
இத்தகைய தன்னலம் பாராத சமூகப் பணி, அதுவும் நன்கொடை வழங்கி ஆதரவு கொடுக்கும் பாணிக்கு முழுமுதல் காரணம் அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சிராஜுதீன் சையது முகம்மது.
2013ஆம் ஆண்டு ஒரு சிறிய நிறுவனமாக உருவெடுத்த ராயல் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்று பல நிறுவனங்களை உள்ளடக்கிய மாபெரும் வணிகக் குழுமமாக மிளிர்கிறது. அதன் வளர்ச்சி மிகவும் பரவசமூட்டும் விதமானது.
நல்லெண்ணத்துடன் நல்ல நோக்குடன், ஈட்டும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூகத்துக்காக வழங்கும் ஆசையுடன் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திரு சிராஜுதீன்.
தொடர்புடைய செய்திகள்
நன்னெறிகளையும் சிறு வயது முதல் தாய், தந்தையரின் நல்ல வளர்ப்பின் அடித்தளத்திலும் குடும்பத்தினரின் ஆதரவு, நல்ல நண்பர்களின் அரவணைப்பு, நம்பிக்கையானவர்களின் உந்துதல் போன்றவற்றை அரவணைத்தவாறே தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார் திரு சிராஜுதீன்.
அயலகத் தமிழ்ச் சமூகத்தை அரவணைத்து இணைக்கும் பாலம்
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், தமிழ் முஸ்லிம் அமைப்புகள், அறநிறுவனங்கள் போன்றவற்றுக்கு பல வழிகளில் ஆதரவை வழங்கிவரும் நிலையில், உலகளாவிய வகையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவடைய செய்வதுடன் சமூக, நிதி ஆதரவை எல்லை தாண்டி உலகெங்கும் செய்துவருகிறார் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சிராஜுதீன்.
மலேசியாவின் நம்பிக்கை தினசரி இணையச் செய்தி நிறுவனத்தை உலகம் முழுவதும் பரவிட செய்யும் திட்டத்தின் முத்தாய்ப்பான முயற்சியில் ‘நம்பிக்கை சிங்கப்பூர்’ நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார் சிராஜுதீன்.
சிங்கப்பூரில் மட்டுமல்ல மற்ற பல நாடுகளில் நம்பிக்கை செய்தி நிறுவனத்தை மக்களுக்குக் கொண்டு சேர்த்து தமிழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் திகழ்கிறார்.
தமிழ்நாட்டின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் நாளேடான மணிச்சுடர் இதழுக்கும் சிராஜுதீனின் ஆதரவு கணிசமானது. எல்லைத் தாண்டிய இந்த ஆதரவை சிங்கப்பூரிலும் செய்ய மறவாத அவர், சிங்கப்பூரின் செம்மொழி இதழுக்கு விளம்பர ஆதரவு வழங்கிவருகிறார்.
அத்துடன் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா இருவர் குறித்து செம்மொழி இதழாசிரியர் எம். இலியாஸ் எழுதியுள்ள இரு நூல்களையும் அச்சிட ஆதரவளித்து சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் இலக்கியத்திற்குத் தமது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகளின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து தமது ஆதரவை வழங்கி அவரது தொண்டுக்கு எல்லை இல்லாமல் பரப்பி வருகிறார்.
சேவைக்குக் கிடைத்த பல உயரிய விருதுகள்
சிராத் குளோபல் கோல்டன் தினார் விருதுகள் 2026 பட்டத்துக்கு சொந்தக்காரர் ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சிராஜுதீன். இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பங்களிப்புக்காகவும் தலைமைத்துவத்துக்காகவும் அவருக்கு அந்த விருது 2026 ஜனவரி 24ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அவருக்கு அந்த விருது கிடைத்தது. குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து 80 பேரைத் திரட்டிச் சென்று உலகெங்கிலும் உள்ள தமிழ் முஸ்லிம் வணிகர்கள் 800 பேரை இணைத்தத் தளம் அது.
சிங்கப்பூர் வணிகர்களை இணைத்து அவர்களுக்கு உலகளவில் உள்ள வாய்ப்புகளைக் காட்டுவது மட்டுமல்லாமல் பல வாய்ப்புகளை உருபெற செய்த பெருமையும் ராயல் கிங்ஸ் நிறுவனத்தையும் அதன் தலைவரையும் சாரும்.
அதைப் போல தமிழ்நாட்டில் அவர் பெற்ற விருதுகள் பல. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மேடைகளில் அவர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
நிறுவனத்தின் முயற்சிகளுக்கும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் அவருக்குத் தொடர்ந்த அங்கீகாரம் கிடைத்துவருகிறது.

