பல மாதங்களாக மும்பையில்தான் தங்கியுள்ளார் துல்கர் சல்மான். காரணம், அவர் நடித்த ‘சீதா ராமம்‘, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களின் வெற்றி.
இதையடுத்து, மொத்த இந்தியாவுக்கும் பொருத்தமான கதைகளைக் கொண்ட ‘பான் இந்தியா’ படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுவதில்லையாம். மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறார்.
அதேசமயம், இந்தி படங்கள் என்றால் தயக்கமின்றி கால்ஷீட் ஒதுக்கத் தயாராக உள்ளார்.
இதனால்தான் பெரும்பாலான நாள்களை மும்பையிலேயே கழிக்கிறாராம். அப்படியே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார் இந்தப் பாச மகன்.
நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.
இதனால் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் மோகன்லால் இருமுடி சுமந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று மம்மூட்டி நலம்பெற வேண்டிக்கொண்டார். எனினும், தனது தந்தை நலமாக இருப்பதாக பின்னர் துல்கர் தெளிவுபடுத்தினார். அதன் பிறகு அவருடனேயே மம்மூட்டி தங்கி உள்ளார்.

