தமிழ்த் திரையுலகில் உள்ளூர் நடிகைகளைவிட, பிற மொழி நடிகைகள், ரசிகர்களின் மனத்தில் எளிதில் இடம்பிடித்துவிடுவார்கள்.
அந்த காலத்து பத்மினி, கே.ஆர். விஜயா தொடங்கி அம்பிகா, ராதா, ரேவதி, ஷோபனா, ஊர்வசி, நதியா என்று தமிழில் கோலோச்சிய நாயகிகளின் பட்டியல் நீளமானது.
பின்னர் அசின், நயன்தாரா போன்றோர் இன்றைய இளையர்களுக்கும் நன்கு அறிமுகமான நாயகிகள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது நீண்ட காலமாகவோ மேற்குறிப்பிட்ட நடிகைகள் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தனர்.
நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்தும், தமிழ் ரசிகர்களின் அபிமான நாயகியாக இன்றும் வலம்வருகிறார்.
இதேபோல் அமலாபால், மஞ்சு வாரியர், பார்வதி, ஐஸ்வர்யா லட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், ரஜிஷா, அபர்ணா பாலமுரளி, கல்யாணி பிரியதர்ஷன், மகிமா நம்பியார் என மலையாள கரையோரத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்து சேர்ந்த நாயகிகளின் பட்டியல் மேலும் நீள்கிறது.
இந்நிலையில், அடுத்த தலைமுறை மலையாள நடிகைகளும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி வருகின்றனர்.
ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரெபல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மமிதா பைஜு.
அதன் பின்னர் ‘டியூட்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மேலும் கவர்ந்தார். ஆனால் இவற்றுக்கும் முன்பே மலையாளத்தில் மமிதா நடித்த ‘பிரேமலு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்போது மூன்று தமிழ்ப் படங்களில் அவர் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்.
இதேபோல் ‘வித் லவ்’ படம் மூலம் நடித்துள்ள அனஸ்ரா ராஜனும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுவார் என்று கூறப்படுகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடித்திருந்த ‘ராங்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனஸ்வரா.
அடுத்து ‘தக்ஸ்’ படத்தில் நடித்திருந்தாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது ‘வித் லவ்’ படம் தன்னை இளையர்களிடம் கொண்டு சேர்க்கும் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் அனஸ்வரா.

