தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 4’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களில் இந்தி நடிகையான ராஷி கண்ணா நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
மொழிகளைக் கற்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என அண்மையில் ராஷி அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார்.
மேலும், அதை ஒரு பணியாகவே மேற்கொள்வதாகவும் இந்தி, ஆங்கிலத்தையடுத்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு பேசத் தெரியுமெனவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகளைத் தற்போது கற்று வருவதாகச் சொன்ன ராஷி, ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றார்.
“படங்களில் கதாபாத்திரங்கள்தான் முக்கியம். அங்கு மொழி இரண்டாம் பட்சம்தான் என்றாலும் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ள அம்மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதனாலேயே எந்த மொழியில் நடித்தாலும் அதைக் கற்றுக்கொள்கிறேன்,” என அவர் கூறினார்.
ஒவ்வொருவரும் சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் திரையுலகில் பயணிப்பதாகவும் அனைவரும் இந்தியத் திரைத்துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால், பல்வேறு மொழிகளில் பணியாற்றினாலும் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். இயக்குநரைப் பொறுத்தவரை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். அவருடைய படங்களில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்,” என ராஷி தெரிவித்தார்.

