தாய்மொழி என்பது பள்ளிப் பாடத்திற்கும் அப்பால் ஒருவரின் அடையாளம் என்று இளையர்களுடன் அணுக்கத் தொடர்பில் இருக்கும் சிலர் கூறுகின்றனர். அதைப் பேசுவதற்குத் தயங்கக்கூடாது என்றும் அதை வளர்த்துக்கொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்வது முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அண்மையில் மொழி குறித்துச் சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை பற்றிய கலந்துரையாடலில் அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ் முரசின் ‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் ஐந்தாம் கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.
ஆய்வின் தலைப்பு, ‘சிங்கப்பூரில் மொழி-அடையாளம், நிர்வாகம்: இனம், சமயம், மொழி குறித்த கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைக் கண்டுபிடிப்புகள்’.
மொழி என்பது தனிமனித அடையாளத்தைக் கடந்து ஒரு நாட்டின் அடையாளமும்தான் என்று தேசியக் கல்விக்கழகத்தின் ஆசிய மொழிகள், பண்பாடுகள் துறையில் கற்றல் புலமையாளராகப் பணிபுரியும் திருவாட்டி கங்கா பாஸ்கரன் கூறினார்.
மாணவர்கள் மொழியை அவ்வாறு பார்க்கும்போதுதான் அதற்கு மேலும் மதிப்புக் கூடுவதாக அவர் சொன்னார்.
சமூகத்தில் பேசும் மொழியே ஒருவரைத் தனித்துக்காட்டுகிறது என்று பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியர் திருமதி துர்கேஸ்வரி சண்முகம் தெரிவித்தார்.
மொழி என்பதற்குப் பின்னால் கலாசாரம், பண்புகள், விழுமியங்கள் எனப் பல அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் பொறியியல் ஆலோசனை நிறுவனமொன்றில் பணிபுரியும் திரு செந்தில் ஆண்டியப்பன்.
மொழியை அன்றாடம் பேசுவதாலும் புழங்குவதாலும் கலாசாரத்தைப் பின்பற்றுவதாலும் அது அடையாளம்தான் என்று சிம் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர் யோஷிதா குமரன் கூறினார்.
பொதுவாக, தாய்மொழியில் பேசுவது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு நிலையாய் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பட்டக்கல்வி படித்துமுடித்த பின்னர், தமிழில் பேசுவது குறைந்துவிடுவதும் ஆய்வில் தெரியவந்தது.
அதுபற்றியும் இளையர்களிடையே நிலவும் தமிழ்ப் புழக்கத்தின் தொடர்பில் வேறுபல அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
அதன் முழுமையான காணொளியை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்: https://youtu.be/aot_dUhmQ3I?si=CPhPIMz9RDpKxUFz

