நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணமயமான, பாரம்பரிய மறுபயனீட்டுச் சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாவளி உணர்வுடன் காட்சியளித்தது பாசிர் ரிஸ் இலாயஸ் சமூக மன்றம்.
பாசிர் ரிஸ் இலாயஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் இது சாத்தியமானது.
கொண்டாட்ட உணர்வோடு சமூகப் பிணைப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ‘ஃபேப்ரிக் ஆஃப் யூனிட்டி’ தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை (அக்டோபர் 4) ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி எம்.பி.யாக தேர்வுசெய்யப்பட்ட பிறகு அவர் கொண்டாடும் முதல் தீபாவளி இதுவே.
“இவ்வாண்டு தீபாவளி எனக்கு இன்னும் சிறப்பானது. ஒரு புதிய குழுத்தொகுதியில், குடியிருப்பாளர்களுடனும் அடித்தளத் தலைவர்களுடனும் இணைந்து பணிபுரிந்து வருகிறேன்,” என்ற அமைச்சர் இந்திராணி, இவ்வாண்டு தீபாவளிக்குச் சற்று புதுமையாகச் சேலைகளைக் கொண்டு அலங்கரிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்ததாகப் பகிர்ந்தார்.
“எந்த விழாவாக இருந்தாலும் நமது கவனம் நீடித்த நிலைத்தன்மை மீதே இருக்க வேண்டும். அந்த வகையில், புதிய அலங்காரங்களை வாங்காமல் பயன்படுத்தப்படாத, நல்ல நிலையில் உள்ள சேலைகளை மறுபயனீடு செய்யலாமென எண்ணினோம். இது ஒரு கூட்டுமுயற்சியே,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் பல பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுடன் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவு, சிங்கப்பூர் வட இந்தியர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் இணைந்து 300க்கும் மேற்பட்ட சேலைகளை நன்கொடையாக வழங்கின.
தொடர்புடைய செய்திகள்
அலங்காரமாகப் பயன்படுத்தப்பட்ட நன்கொடை சேலைகள் நவம்பர் 16ஆம் தேதிவரை காட்சிக்கு வைக்கப்பட்டு, பிறகு முதியோர் இல்லங்கள், வெளிநாட்டு ஊழியர் அமைப்பு, மலேசியா, இந்தியா போன்ற மற்ற நாடுகள் என வெவ்வேறு இடங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும். இதன்வழி அனைவரும் தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக இருக்க வழி கிடைக்கும் என்றார் அமைச்சர் இந்திராணி.
“குழு உறுப்பினர்களின்றி இது சாத்தியமில்லை. ஏராளமான சேலைகள் நன்கொடையாக வந்து குவிந்தன. எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக, சீனர்கள், மலாய்க்காரர்கள் என மற்ற இனத்தவர்களும் இந்த அலங்காரங்களைச் செய்ய முன்வந்தனர்.
“தொடக்கத்தில் எங்களுக்குச் சேலைகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், இப்போது அவற்றைக் கட்டவும் கற்றுக்கொண்டோம்,” என்றார் இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் சரவணன் எம்.கோவிந்தசாமி, 54.
“இந்தச் சேலைகளை எப்படி அலங்காரமாகக் கட்டுவது என்று பலமுறை சிந்தித்து, பிறகு நாம் சேலையை எப்படி உடுத்துகிறோமோ அதேபோல கட்டலாம் என்று முடிவெடுத்து மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தோம். வண்ணங்கள், நீளம், சேலையின் துணி வகை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கு ஏற்றவாறு அலங்காரங்களை வடிவமைத்தோம்,” என்றார் பாசிர் ரிஸ் குடியிருப்பாளர் ர.சஜீத்தா, 41.
பாசிர் ரிஸ் இலாயஸ் சமூக மன்றத்தின் வெளிப்புறத்தில் நடைபெற்ற நடு இலையுதிர்க்கால கொண்டாட்டங்களில் திளைத்த மற்ற இனத்தவர்களும் தீபாவளியைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பல்லின மக்கள் ஒன்றுகூடவும் இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது.