தமிழின் சிறப்பையும் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளையும் தொகுப்பது, அவற்றை உலகின் எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்பது, மொழியையும் பண்பாட்டையும் மறவாமல், தமிழ் உறவுகள் ஒருவரோடு ஒருவர் உறவாட பாலம் அமைத்துக்கொடுத்தல், புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் போன்றவை தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் நோக்கம்.
தரமான தகவல்களை வெளியிட்டு, தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு மொழி ஆய்வு, வளர்ச்சி சார்ந்த சிந்தனைகள், உரையாடல்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சாதனையாளர்கள் என அனைவரிடம் இருந்தும் படைப்புகளைப் பெற்று அவர்களின் கருத்துகளை, சிந்தனைகளை பதிவுசெய்வது இந்த இதழின் நோக்கங்களில் அடங்கும்.
தமிழில் உள்ள அரிய மொழி சார்ந்த தகவல்களை சேகரித்து தரமான முறையில் வடிவமைத்து வாசகர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் 2015 ஆகஸ்ட்டில் இந்த இதழ் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சிராங்கூன் டைம்சின் 100வது இதழ், ஜூன் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது. சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழுவினர், படைப்பாளர்களுடன் அருஞ்சொல் இதழ் ஆசிரியர் சமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

