இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளராகவும் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் அப்துஸ் சமது. திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்த அல்லாமா அப்துல் ஹமீது பாகவியின் புதல்வரான அவர், தந்தையாரின் பணிக்கு எழுதுகரமாக இருந்து துணைபுரிந்தவர்.
பரந்த உலக வரலாற்று அறிவு, ஆழ்ந்த மார்க்க ஞானம், நல்ல ஆங்கில, தமிழறிவு, எதிலும் தெளிவான பார்வை, ஆழமான சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், சமுதாயத் தலைவர் என பன்முகத் திறன்கொண்டவர் அவர்.
மணி விளக்கு மாத இதழ், மணிச்சுடர் வார இதழ், அறமுரசு, தினசரி, கிரசண்ட் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றை நடத்திய சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது 1999ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி காலமானார். அவரது நூற்றாண்டு விழாவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அக்டோபர் 26ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் அனுசரித்தது.
சிங்கப்பூர் எழுத்தாளரும் செம்மொழி சமூக இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ என்ற நூல், விழாவில் வெளியிடப்பட்டது.

