வாழ்நாள் முழுவதும் திருக்குறள் பாக்களை நினைவுகூர்ந்தால் சங்கடமான சூழ்நிலைகளிலும் குழம்பிப் போகாமல் அறம் அறிந்து செயல்படலாம்.
இதற்கான அடித்தளத்தைப் பிஞ்சிலேயே ஏற்படுத்தும் பொருட்டு குறட்பாக்களை மனனம் செய்யும் போட்டி உள்ளிட்ட போட்டிகளை தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் 37ஆவது முறையாக நடத்தியுள்ளது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உள்ளரங்கில் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 10ஆம் தேதி அந்தப் போட்டி நிகழ்ச்சி, 11 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
மழலையர்கள் வண்ணம் தீட்டும் போட்டிகளில் ஈடுபட்ட நேரத்தில் பாலர் பள்ளி 1,2 மாணவர்களும் தொடக்கப்பள்ளி 1,2 மாணவர்களும் திருக்குறளை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியில் பங்கேற்றனர்.
தொடக்கப்பள்ளி 5,6 மாணவர்களுக்கும் உயர்நிலை 1,2 மாணவர்களுக்கும் மனனத்துடன் ‘காஹுட்’ போட்டியும் நடந்தேறியது. உயர்நிலை 3க்கும் மேல் படிக்கும் மாணவர்கள், திருக்குறள் ஒட்டிய விவாதத்தில் ஈடுபட்டனர்.
போட்டிகள் மொத்தம் 175 மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். அவர்களுடன் 132 மாணவர்கள் வெற்றிக்கிண்ணம், சான்றிதழ்களுடன் கூடிய ஊக்கப்பரிசுகளைப் பெற்றனர்.
திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஆறுதல் பரிசைப் பெற்ற பாலர் பள்ளி மாணவர் ஹர்ஷு மதன், போட்டியின் மூலம் உற்சாகம் அடைந்ததாகக் கூறினார்.
‘எம்இஎஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம். அப்துல் ஜலீல் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
திருமணங்களை நடத்தி வைப்பவரான திருநாவுக்கரசு பழனியப்பன் இவ்வாண்டு திருவள்ளுவர் விருதைப் பெற்றார். அத்துடன் முனைவர் சீதாலட்சுமியும் திரு முத்துக்குமார் ராஜேந்திரனும் சிறப்புப் பரிசைப் பெற்றனர்.