வளர்தமிழ் இயக்கத்தின் புதிய தலைவராக திரு நசீர் கனி, 65, பொறுப்பேற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டில் வளர்தமிழ் இயக்கம் தொடங்கியதிலிருந்து உறுப்பினராக செயல்பட்டுவரும் இவர், துணைத் தலைவர், பொருளாளர், துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றி தற்போது ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியிலிருந்து தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
28 ஆண்டுகளாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சங்கத்தின் தலைவராகவும் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினராகவும் இதற்கு முன் அவர் பணியாற்றியுள்ளார்.
ஆங்கில மொழிப் புழக்கம் வீட்டில் அதிகமாக இருக்கும் இன்றைய சூழலில், இந்த நிலைமையை எப்படி மாற்றியமைப்பது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு நசீர் கனி.
“வீட்டில் தமிழ்ப் புழக்கத்தில் இருந்தால், நாட்டிலும் தமிழ்ப் புழக்கத்தில் இருக்கும்,” என்றார் அவர். தமிழின் பயன்பாட்டை மேம்படுத்தும் முயற்சிகளை எடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் என்பது ஒரு தேர் போன்றது. அந்தத் தேரை இழுப்பதற்கு மக்களும், அமைப்புகளும், தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இழுத்தால் தேர் நகராமலேயே ஒரே இடத்தில் இருக்கும். இல்லையென்றால் கவிழ்ந்துவிடும்.
“தமிழ்மொழியால் தேரை அலங்கரித்து, அதை வீடு வீடாக இழுத்து சென்று அதனுடைய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் குடும்பங்களுக்கு எடுத்துரைக்கும்போது அந்தத் தேருடைய பிரகாசம் எல்லாரையும் போய் சேரும்,” என்றார் திரு நசீர் கனி.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இக்கால மாணவர்களும் இளையர்களும் தமிழ்மொழி மீது கொண்டுள்ள ஆர்வத்தை வளர்க்க புத்தாக்கச் சிந்தனையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயார் செய்யவும் தமிழ்மொழியின் வளர்ச்சியை ஊக்குவிக்க சமூக ஊடகத் தளங்களை ஓர் உத்தியாக பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

