கோவை: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலு மணி தனது சொந்த செலவில் இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் (95). பல ஆண்டுகளாக இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். லாபத்தை எதிர்பார்க்காமல் இட்லி விற்கும் பாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கமலாத்தாளின் நேர்மையையும், சேவையையும் பாராட்டும்விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு சென்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்தார்.
இந்த இரண்டு சென்ட் இடத்தின் பத்திரத்தை கமலாத்தாளிடம் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 2) அன்று வழங்கினார்.

