புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,023 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களையும், 5,000 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறக்குறைய ரூ.15,000 கோடிக்கு தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் இந்த இடங்கள் சேர்க்கப்படும்.
இவ்வாறு கூடுதல் இடங்களை உருவாக்குவதன் மூலம் நாடு முழுவதும் சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைப்பது அதிகரிக்கும் என்றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் முழுவதும் புதிய சிறப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்றும் மத்திய சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, அதிகமானோர்க்கு மருத்துவச் சேவை கிடைக்க வழிவழிக்கும் என்றும் அந்த அமைச்சின் அதிகாரிகள் கூறினர்.
“இந்த முயற்சி இளங்கலை மருத்துவத் திறனை கணிசமாக அதிகரிக்கும்.இதற்காக மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“கூடுதல் முதுகலை இடங்களை உருவாக்கும் நடவடிக்கை இந்தியாவில் மருத்துவக் கல்வியைத் தொடர மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும். இது உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.