பறவைக் காய்ச்சலுக்கு காகங்கள் பலி

பறவைக் காய்ச்சலுக்கு காகங்கள் பலி

1 mins read
ab065334-6e9b-4c59-a732-9d3d01526647
மத்தியப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கான காகங்கள் பலியாகியுள்ளன. - படம்: இந்தியா டுடே

பாட்னா: பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன.

ஜனவரி 11ஆம் தேதி பீகாரின் பாகல்பூர் மாவட்டம், நவ்காச்சியாவில் 100க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்து கிடந்தன.

அது குறித்து உடனடியாக வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த காகங்களின் உடல்கள் பரிசோதிக்கப்பட்டதில் அவை பறவைக் காய்ச்சலால் (ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸ்) பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்பகுதியிலுள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வைரஸ் வீட்டுப் பறவைகளுக்குப் பரவியுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் வாரத்தில் மத்தியப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் பல நூறு காகங்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் கிருமியால் பறவைகள் உயிரிழந்தது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து கிடக்கும் பறவைகளைத் தொட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்