தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி குறித்த முழு அறிக்கை வெளியிடப்படும்: இந்திய அரசு உறுதி

1 mins read
7248ab54-2e12-4304-b5c0-079a51f52b64
கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகள் சட்டப்படி, உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்றி வெளியிடப்படும் என தொல்லியல் துறை உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்  அமைச்சர் கஜேந்திர சிங். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மதிப்பாய்வில் உள்ளதாகவும் அதன் பின்னர் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் இந்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறியுள்ளார்.

மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்துபூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கஜேந்திர சிங், நிபுணர்களின் கருத்துகள் ஆராய்ச்சியாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன என்றும் அறிக்கை குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“அறிக்கையை நிராகரிக்கவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறை மற்றும் கல்வி நிறுவனங்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சியை நடத்தி வருகின்றது,” என்றார் அவர்.

“தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ள குறிப்பிட்ட காலம் எடுக்கலாம். அந்த காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தலைமை தாங்கியிருக்கலாம். அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் தொல்லியல் துறை நிபுணர்களால் சரிபார்க்கப்படுகின்றன.

“கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகள் சட்டப்படி, உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்றி வெளியிடப்படும் என்று தொல்லியல் துறை உறுதி அளிக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், நிர்வாகக் காரணங்களால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்