டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஏறக்குறைய 20 ஹெக்டர் பரப்பளவில் குப்பைகளும் சேறும் பரவலாகக் காணப்படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செயற்கைக்கோள் படங்களையும் அது வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைக் கண்டறிய கடந்த வியாழக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட படம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இந்த ஆய்வில் கீர் காட், பாகிரதி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில், பெரும் குப்பைக்குவியல் காணப்பட்டது.
வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய அறிவியல் பகுப்பாய்வுகள் நடந்து வருவதாகவும் இது இமயமலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் பாதிப்பு அதிகரித்து வருவதை உணர்த்துவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டது.
இதுவரை வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 260 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

