ஹைதராபாத்: சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு நிகராகத் தெலுங்கானாவின் கட்டமைப்பை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு எனத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
‘2047க்குள் தெலுங்கானாவை வளர்ச்சி பெற்ற மாநிலமாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தைத் திரு ரேவந்த் ரெட்டி டிசம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2047க்குள் தெலுங்கானாவை மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவதே எங்களது இலக்கு. அதற்கான முதல்படிதான் இந்த ‘2047 தொலைநோக்குத் திட்டம்’” என்றார்.
மேலும், “சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வளர்ச்சி பெற்று இருப்பதைப் போலவே தெலுங்கானாவை மாற்ற இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஆசிய பொருளியல் வல்லரசு நாடுகளுக்கு நிகராகத் தெலுங்கானா தனது அளவுகோலை நிர்ணயித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் 10% தெலுங்கானாவிலிருந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம்,” எனத் தெலுங்கானா முதல்வர் கூறினார்.
இத்திட்டம் டிசம்பர் 8,9ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்படும்.
நிதி ஆயோக், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் விரிவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

