டெஹ்ராடூன்: உத்தராகண்டின் டெஹராடூனில் கனத்த மழையால் ஏற்பட்ட மேகவெடிப்பில் வெவ்வேறு வட்டாரங்களில் உள்ள வீடுகளும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பேட்டையும் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகவெடிப்பால் கார்லிகாட் ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டதால் சுற்றுவட்டாரங்களில் கடுஞ்சேதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த வட்டாரங்களில் உள்ளோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து பெய்த கனத்த மழையால் ஆபத்தான வகையில் பெருக்கெடுத்த ஆற்று நீரில் மூழ்கிய பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
சஹஸ்த்ரதாரா, டெஹ்ராடூன் வட்டாரத்தில் மழையால் சில கடைகளும் சேதமடைந்ததாக உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சொன்னார்.
உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தனிப்பட்ட விதத்தில் நிலைமையைக் கண்காணிப்பதாகவும் திரு தாமி கூறினார்.
நிலைமைப் பற்றிய தகவல்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடித் திரு தாமியிடமிருந்து தொலைபேசி வழி கேட்டறிந்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் துணை நிற்பதாகவும் மத்திய அமைச்சு முழு ஆதரவு தரும் என்றும் திரு மோடி உறுதிகூறினார்.
கனத்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் திரு தாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் கூறினார். உள்துறை அமைச்சு நிலைமையைச் சரிசெய்ய மீட்பு, நிவராண உதவிகளுக்கு முழு ஆதரவு தரும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
“பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலாலும் ஒத்துழைப்பாலும் நிவாரணப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும் என்று திரு தாமி தெரிவித்தார்.