சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: இரண்டாவது சந்தேக நபர் தடுத்துவைப்பு

சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: இரண்டாவது சந்தேக நபர் தடுத்துவைப்பு

1 mins read
06c3d0bf-73df-4f0d-b6e1-c3c28adc6447
சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மும்பையின் லீலாவதி மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை பலமுறை கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபரை இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் சனிக்கிழமை (ஜனவரி 18) தடுத்து வைத்தனர்.

மும்பையில் வியாழக்கிழமை (ஜனவரி 16) கானின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர், 54 வயது கானை ஆறுமுறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. முதுகெலும்பு, கழுத்து, கைகளில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை பிரதிநிதி சஞ்சீவ் சின்ஹா, “சந்தேக நபர் ஒருவர் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணம் செய்வதாக மும்பை காவல்துறையிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது,” என்றார்.

“காணொளி அழைப்பு மூலம் மும்பை காவல்துறை தொடர்புகொள்ளப்பட்டது. சந்தேக நபரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,” என்றார் திரு சின்ஹா.

இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒருவரை மும்பை காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தடுத்து வைத்தது.

குறிப்புச் சொற்கள்