புதுடெல்லி: வணிகங்களுக்குச் செலுத்தப்படும் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட ‘யுபிஐ’ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை வணிகர் தள்ளுபடிக் கட்டணம் (எம்டிஆர்) அல்லது சேவைக் கட்டணம் விதிக்க இந்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், தனிமனிதர்களுக்கு இடையே நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு அந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) தாக்கல் செய்த வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவானது வங்கி மற்றும் கட்டணச் சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னணு முறையில் கட்டணம் வசூலிப்பதற்கான தடையை நீக்க முயல்கிறது. இருப்பினும், அத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.2,000க்கு அதிகமான பரிவர்த்தனைகள் மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 5% மட்டுமே. ஆனால், அவை மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 65% பங்கைக் கொண்டுள்ளன. எனவே பால், காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கோ அல்லது டாக்சி, ஆட்டோ கட்டணம் செலுத்துவதற்கோ இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. கடந்த ஜூலையில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான 23.7 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
“இத்திட்டம் நடப்பிற்கு வந்தாலும் 95% பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இருக்காது. மேலும், அனைத்து வணிகர்களும் இந்தச் சிறிய கட்டணத்தைப் பயனீட்டாளர்களிடம் வசூலிக்க மாட்டார்கள்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே, வசூலிக்கப்படும் கட்டணத்தின் அதிகபட்ச வரம்பை அரசு நிர்ணயிக்கக்கூடும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


