ஹைதராபாத்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த இரு வாரங்களுக்குமுன் கூறியிருந்தார்.
அவருடைய இக்கருத்தைக் கண்டித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் மாணவர்கள், பள்ளிகள்மீது ஏற்படும் பாதகமான தாக்கத்தைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், தெலுங்கானாவில் வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தெலுங்கு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், “வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம். எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தித் திணிப்பு சர்ச்சைகளுக்கு நடுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.