ஆதி சங்கராச்சாரியாரின் சொந்த மாநிலமான கேரளாவில், சமய மற்றும் தத்துவ மரபுகளால் நிறைந்த காலடியில் முதன்முறையாக நடைபெறவுள்ள பேரளவிலான கல்வி மாநாட்டில் பேசவிருக்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்.
இந்த மாத இறுதியில் ஆர்எஸ்எஸ்-தொடர்புடைய ‘சிட்ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்’ ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மாநாடு ஜூலை 25 முதல் 28 வரை கேரளாவில் உள்ள காலடியில் நடைபெறுகிறது.
மேற்கூறிய இந்த நான்கு நாள் மாநாட்டில் கல்வி அமைச்சர்கள், உள்பட இந்தியாவெங்கிலும் உள்ள சுமார் 80 பல்கலைக்கழகங்கலிருந்தும் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏறத்தாழ 300க்கும் அதிகமான பேராளர்கள் பங்குபெறுவர் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் அதுல் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமயங்களின் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு நாளடைவில் ‘ஆர்எஸ்எஸ்’ஸின் கல்வி சார்ந்த கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல உதவும் முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.
“வளர்ச்சிபெற்ற இந்தியாவிற்கான கல்வி” எனும் கருப்பொருளில் அரங்கேறவுள்ள இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கல்வியில் இந்தியமயமாக்கல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் விரிவான செயலாக்கம்குறித்து பேசவுள்ளதாக அமைப்பு கூறியுள்ளது.
“கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் அந்த அமைப்பை இந்தியமயமாக்குவதுமே எங்கள் தலையாய கடமை. இதைத் தனியொரு அமைப்போ நபரோ செய்ய இயலாது.
‘‘எனவே அரசாங்கம், கல்வித்துறை, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைத் திரட்டி இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளோம்,” என்றார் திரு கோத்தாரி.
அதுவே மாநாட்டின் நோக்கமும் கூட என்று கூறிய அவர், “இதன் இலக்கு மேற்கத்திய அறிவு முறைமைகளை எதிர்ப்பது அல்ல, மாறாக இந்திய மாணவர்கள் தங்கள் மரபுகள், கலாசாரம் சார்ந்த அறிவில் வேரூன்றி இருப்பதை உறுதி செய்வதே,” என்றும் விளக்கினார்.