பாட்னா: பொதுவாக கார், பேருந்துகளை மக்கள் தள்ளிச் செல்வதைப் பார்த்ததுண்டு. ஆனால், ரயிலைத் தள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான். இதுபோன்ற சம்பவம் பீகார் மாநிலம், லக்கிசராயில் உள்ள கியுல் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பயணிகள் ரயிலைத் தள்ளிச்செல்லும் இந்தக் காணொளி பரவி வருவதுடன், பலரும் பலதரப்பட்ட கருத்துகளை நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதை ரயில்வே துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மற்ற பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக தீ அணைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
பாட்னா-ஜாசிடிஹ் மெமு ரயிலில் ஒரு சிறிய தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தீவிபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்து மற்ற ரயில் பெட்டிகளுக்குத் தீ பரவாமல் தடுப்பதற்காக அவை தனியாகப் பிரிக்கப்பட்டன.
அப்போது பிரிக்கப்பட்ட ரயிலின் இதர பெட்டிகளை இளைஞர்களும் சிறுவர்களும் உற்சாகமாகத் தள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

