வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலைகளையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றன. கடந்த ஐந்து நாள்களில் 10 முதலைகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
10 முதலைகளில் 2 முதலைகளை வனப்பகுதியில் விட்டதாகவும், 8 முதலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆற்றின் நீர்மட்டம் குறையும் போது அவற்றை விடுவிப்போம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் விஸ்வாமித்ரி ஆற்றில் 300 சதுப்புநில முதலைகள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆற்றின் நீர் மட்டம் அதன் அபாய கட்டமான 37 அடியிலிருந்து 12 அடியாகக் குறைந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 24 அடியாக இருந்தது.
எவ்வாறாயினும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், முதலைகள் ஆற்றின் பாதுகாப்பான எல்லைகளை விட்டு வெளியேறி, வெள்ளம் நிறைந்த தெருக்களில், நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன, ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
விஸ்வாமித்ரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து முதலைகளை மீட்கும் பணி ஆண்டு முழுவதும் தொடரும். அதே வேளையில், மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.


