கரூர்: சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்குத் தக்க பதிலடி கொடுத்தது மட்டும் போதாது; எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கரூரில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும், சில காயங்களை, வலியை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும் காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்.
“கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர். என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுகிறார்கள்.
“அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல நான். வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால்; எனக்கு ஜனம்தான் முக்கியம்.
“என்னைப் பேசு பேசு என்று சொல்கிறார்கள்; ஆனால், பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள்.
“ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இதுக்கும் மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.
“பிறர்மீது பழியைப் போட்டுவிட்டு, மக்களைத் தெருவில் அம்போ என விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை, செய்யப்போவதும் இல்லை. ‘டாக் லெஸ், வொர்க் மோர்’ இதுதான் நமது பாலிசி. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை; ஊழல் இல்லை. அரசு அலுவலகங்களில் வேலை மளமளவென நடக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது.
“தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள்.
“தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்கிறார்கள். சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்,” என்று முதல்வர் விஜய் தமது உரையில் குறிப்பிட்டார்.
அப்போது இரண்டு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும். நான் ரீல் தாய்மான் அல்ல ரியல் தாய்மாமன்.
“என் மனதைவிட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்த கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்,” என்பன அவை.

