பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை தாய்மொழியில் மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பயிலும் நடைமுறையை உருவாக்க இந்தியாவின் மத்திய கல்வித் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக நாடு முழுவதிலுமுள்ள சில இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்ஐடி) ஆகிய கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பனாரசில் உள்ள ஐஐடியில் இந்தி மொழியில் பொறியியல் கல்வி தொடங்கப்பட உள்ளது என ‘தி பிரிண்ட்’ பத்திரிகையிடம் பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிகளில் பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்காக உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்மொழி பொறியியல் என்பதால் நடைமுறை சிக்கல்கள், அவற்றைச் சமாளிக்கத் தேவையான திட்டங்கள் பற்றிய விவரங்கள் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது.