இந்தியாவில் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 26, 27 தேதிகளில் புதுடெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்த விவசாயிகள் ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லியை நோக்கி முக்கிய 5 தேசிய நெடுஞ்சாலைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.
அவர்களை மாநில எல்லைகளிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து விவசாயிகளை விரட்டியத்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பாரதிய கிசான் யூனியன், அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் “டெல்லி சலோ” என்ற பெயரில் விவசாயிகள் பேரணிக்கு அழைப்பு விடுத்தன.
இதனை அடுத்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லியை நோக்கி முக்கிய 5 தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் குவியத் தொடங்கியுள்ளனர். அவர்களை மாநில எல்லைகளிலேயே தடுத்து நிறுத்த ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
டெல்லி - பரீதாபாத் எல்லையில் இருமாநில போலிசார், தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. தீவிர பரிசோதனைக்கு பிறகு வாகனங்கள் டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்பட்டதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.