தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 42 வயது சுகாதாரப் பணியாளர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை காலை 11.30 மணியளவில் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மறுநாள் காலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து காலை 5.30 மணியளவில் மாவட்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
இந்தச் சம்பவம் பற்றி பேசிய மாநில பொது சுகாதார இயக்குநர் ஜி.சீனிவாசராவ், அவர் உயிரிழந்த தற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது மரணம் குறித்து மேலும் விவரங்கள் தெரிய வரும் என கூறப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்று மகாராஷ்டிராவின் சுகாதா அமைச்சர் ராஜேஷ் தோபே வலியுறுத்தியுள்ளார்.
“கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
“தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்வதில் பயனாளிகள் இடையே சற்று குழப்பம் நிலவுகிறது. இதுவரை போட்டுக்கொண்டவர்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
“இரண்டு தடுப்பு மருந்துகள் பற்றியும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவை முற்றிலும் பாதுகாப்பானவை,” என்றும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.