புதுடெல்லி: மாலத் தீவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்திய ராணுவம் தமது நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்தியாவை மாலத்தீவு முழுமையாக ஒதுக்கிவைக்க முடியாது என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
புதிய அதிபரின் கோரிக்கையால் மாலத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அத்தீவு மீது இருந்த இந்தியாவின் செல்வாக்கு ஆட்டம் காணும் என கூறப்படுகிறது. இதையடுத்து சீனாவின் செல்வாக்கு இங்கு தலைதூக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திரு முகமது முய்சு, சீன ஆதரவாளர். இவர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் சீனா அவரை பாராட்டியிருந்தது.
சீனாவின் விசுவாசியான முகமது முய்சு, தற்போது இந்தியாவுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
செப்டம்பர் மாத அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் ‘இந்தியா வெளியேறு’ என்ற முழக்கத்தை அவர் முன்வைத்திருந்தார்.
இத்தேர்தலில் அவர், தற்போதைய அதிபரான இப்ராஹிம் சோலியை தோற்கடித்துள்ளார்.
ஆனால் இந்தியாவின் உறவை முழுமையாக துண்டித்துக் கொள்ள முடியாது. பெய்ஜிங்குக்கு முழு ஆதரவாக மாலத் தீவு செயல்பட முடியாது என்று வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையின் தென்மேற்கே உள்ள மாலத் தீவுடன் இந்தியா பல ஆண்டுகளாக தற்காப்புத் துறை உட்பட ஆழமான உறவை வைத்துள்ளது. மாலத் தீவின் துறைமுகத்தை மேம்படுத்துவது உட்பட பல திட்டங்களிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
“சீனாவுக்கு ஆதரவாக அவர் செயல்படலாம். ஆனால் இந்தியாவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட முடியாது,” என்று சிங்கப்பூரில் உள்ள தெற்கு ஆசிய ஆய்வுக் கழகத்தின் டாக்டர் அமிட் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் மாலத்தீவின் கடன், அதன் உள்நாட்டு உற்பத்தியான 6.1 பில்லியன் யுஎஸ் டாலரில் 113 விழுக்காடாக இருந்தது. மாலத்தீவுக்கு பயணத் துறை முக்கிய வருமானமாக உள்ளது. இந்தியா அதற்கு முக்கிய காரணமாகும்.