புதுடெல்லி: வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லி முற்றுகை போராட்டத்தைப் புதன்கிழமை மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணியை தொடங்கின.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்ற விவசாயிகள் மீது துணை ராணுவமும் காவல்துறையும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர்.
சம்பு பகுதியில் நடந்த தாக்குதலில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
வருகிற மார்ச் 10-ந்தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லி ரயில் நிலையங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பேரணி செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வரும்நிலையில், சாலைகளில் ஆணிகள் அடித்தும், கான்கிரீட் தடுப்புகளை அமைத்தும் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லையில் ஏராளமான காவல்துறையினரும் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.