இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் - மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என மையம் கூறியது.
இந்த வேளையில்தான் நாடாளுமன்றத் தேர்தலும் அதையொட்டிய பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளதால், கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மதியம் 12மணி முதல் மாலை 3மணி வரை வெயிலில் செல்வதை தவிர்த்தல், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல், பருத்தி ஆடைகளை அணிதல், வெளிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை அல்லது தொப்பி, காலணிகளை பயன்படுத்துதல், மதுபானம், தேநீர், காபி, குளிர்பானங்களைத் தவிர்த்தல். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் பழைய உணவுகளையும் தவிர்த்தல் ஆகிய அறிவுரைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.
நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ அனுமதிக்கக்கூடாது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வசதிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
கோடைக் காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.