புதுடெல்லி: மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தமனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்கள் அடுத்த ஆறு வாரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். இதை அவர்கள் செய்யத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரூ.20 ஆயிரம்அபராதம் என்பது பெரிய தொகையாக இல்லாது போனாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க இந்த உத்தரவு கட்டாயப்படுத்தும் என்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.