புதுடெல்லி: காவிரியில் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு தரவில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேகதாது (மேக்கேதாட்டு) என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே ஏறக்குறைய 60 டிஎம்சிக்கும் அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி ரூபாய் செலவில் கர்நாடக அரசு அணை கட்ட, கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழகத்திற்குத்தான் அதிக நன்மை என்கிறது கர்நாடகா.
ஆனால், ஏற்கெனவே உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா, இன்னோர் அணையைக் கட்டினால் தற்போது வரும் சிறிதளவு உபரி நீர்கூட வராது என்பதே தமிழகத்தின் எண்ணமாக உள்ளது. இதனால், மேகதாது அணையைத் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது.
காவிரி பயன்பாட்டு மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. ஆனாலும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று எப்படியாவது மேகதாதுவில் அணையைக் கட்ட துடிக்கிறது கர்நாடகா.
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்பதால், அணை கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசால் மேற்கொள்ள முடியவில்லை.
இந்தச் சூழலில் மேகதாது அணை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்துள்ள மத்திய அரசு, “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை,” என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரிப் பிரச்சினை முற்றியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.