மும்பை: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்திற்கு பிரிட்டன் தயாரித்த இலகுரக ஏவுகணைகளை வாங்குவதற்கான 350 மில்லியன் பவுண்டு (S$606 மில்லியன்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் வியாழக்கிழமை (அக்டோபர் 9) சந்தித்த நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தம் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே பரந்த ஆயுத பங்காளித்துவத்திற்கு வழிவகுக்கிறது. தற்போது இதுகுறித்து இரு அரசாங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று வியாழக்கிழமை (அக்டோபர் 9) வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.
கடந்த 12 மாதங்களாக திரு ஸ்டார்மர், பிரிட்டனின் தற்காப்புத் துறையில் கவனம் செலுத்தி, பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறார்.
இரு நாடுகளும் கப்பல்களுக்கான மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களுக்கான 250 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அடுத்த கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், இந்தியாவுடன் ஒரு புதிய மைல்கல்லை அக்டோபர் 9 அன்று எட்டியது என்றும் பிரிட்டன் கூறியது.
மேலும், பிரிட்டனைச் சேர்ந்த ஒன்பது பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.