திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் புற ஊதா கதிர்வீச்சு பதிவாகி உள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அறிவித்துள்ளது.
புற ஊதா கதிர்வீச்சு நீண்ட நேரம் நம்மீது படும்போது தோல், கண்கள், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றில் கடும், நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில், எட்டு டிகிரிக்கு மேற்பட்ட புற ஊதா கதிர் வீச்சு கேரளாவின் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய பகுதிகளில் பதிவாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் பத்து இடங்களில் ஏழு டிகிரி புற ஊதா கதிர்வீச்சு அளவு பதிவானதாகவும் இது மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கும் அளவு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, காலை பத்து மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புற ஊதாக் கதிர் அளவு உச்சத்தில் பதிவாகிறது என்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் நேரடி சூரிய ஒளியைத் தவிர்ப்பது நல்லது என கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர், மீனவர்கள், நீர்வழிப் போக்குவரத்து ஊழியர்கள், இருசக்கர வாகனமோட்டிகள், சுற்றுலாப் பயணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

