சென்னை: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உள்நாட்டுத் தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட, முதலாவது ‘சுற்றுப்பாதை’ வகை விண்கலமான ‘விக்ரம்-1’ சனிக்கிழமை (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
விண்கலம் ஏவப்படுவதை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அறிவியலாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ தயாரித்துள்ள அந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. விரைவான, தேவைக்கேற்ப ஏவும் சேவைகளை வழங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்திய இளையர்களின் திறமை, உறுதி, தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றை இது எடுத்துக்காட்டுகிறது,” என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘விக்ரம்-1’ விண்கலத்தின் பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தான் சொந்தமாக உருவாக்கிய விண்கலத்தின்மூலம் செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முயற்சி செய்வது இதுவே முதன்முறையாகும்.
இந்த பயணத்தின் நோக்கம் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது மட்டுமன்று. மாறாக, விண்கலத்தின் அனைத்து நிலைகளும் விண்வெளிப் பயணத்தின்போது எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாக மதிப்பீடு செய்து, தரவுகளைச் சேகரிப்பதே இந்த சோதனையின் முதன்மைக் குறிக்கோள்.
350 கிலோவரை எடை கொண்ட சிறிய, நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை 450 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

