புதுடெல்லி: உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் புதிய உடல் எடை குறைப்பு ஊசி மருந்துகள், இந்தியர்களுக்கும் சிறந்த பலனைத் தருவதாக அண்மை ஆய்வு தெரிவித்துள்ளது.
டாக்டர் அம்ப்ரிஷ் மித்தல் தலைமையிலான குழு, ஏறக்குறைய 150 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 10ல் நால்வர் (40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர்), தங்களின் மொத்த உடல் எடையில் 10 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைத்துள்ளனர்.
பொதுவாக ஆறு மாத காலத்தில் நோயாளிகள் சராசரியாக எட்டு விழுக்காடு எடையைக் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி சாகேட்டில் உள்ள ‘மேக்ஸ் சூப்பர்’ மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள், ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசம்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ‘திர்செபாடைட்’ மருந்து விரைவான பலன் அளிக்கிறது
நீரிழிவு நோய் இல்லாதவர்கள், நீரிழிவு உள்ளவர்களைவிட இரண்டு மடங்கு அதிக எடையைக் குறைத்துள்ளனர்.
இதில் செமாக்ளுடைட்’ (Semaglutide) எனும் மருந்தைக் காட்டிலும், புதிய ‘திர்செபாடைட்’ (Tirzepatide) ஊசி மருந்து விரைவாகவும் கூடுதலாகவும் பலன் அளிக்கிறது.
குமட்டல், மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற சிறிய பக்கவிளைவுகள் தொடக்கத்தில் ஏற்பட்டாலும், அவை சிகிச்சையை நிறுத்தும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
“இது தொடக்கநிலை முடிவுதான். ஓராண்டுவரை சிகிச்சையைத் தொடரும்போது உடல் பருமன் இன்னும் அதிகமாகக் குறையும்,” என்று டாக்டர் மித்தல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவைப் பொறுத்தவரை உடல் பருமனும் நீரிழிவு பாதிப்பும் அதிகரித்து வரும் சூழலில், முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன் இத்தகைய மருத்துவ சிகிச்சைகளும் இணையும்போது அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
இவை உடனடி ‘வித்தைகாட்டும்’ மருந்துகள் அல்ல என்றாலும், மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தும்போது நிலையான நன்மைகளைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

