லக்னோ: செயற்கை நுண்ணறிவு செயலியான சேட்ஜிபிடி உதவியுடன் ஒருவர் தனது காலணிகளைக் கண்டுபிடித்த சுவாரசியம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்கு உள்ள உஜ்ஜைனி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார் ஓர் இளையர். கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்தபோது கோயில் வாசலில் அவர் தன் காலணியை விட்டுச் சென்ற இடத்தில் மற்றவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான காலணிகள் குவிந்து கிடந்தன.
எண்ணற்ற காலணிகளுக்கு இடையே தனது செருப்பைத் தேடியுள்ளார் அந்த ஆடவர். நீண்ட நேரம் தேடியும் செருப்பு கிடைக்காததால் திணறிய அவரது மனத்தில் நல்ல யோசனை தோன்றியது.
அதன்படி, தமது, காலணியின் வகை, வடிவமைப்பு, தோற்றம், நிறம் ஆகியவற்றைத் தெளிவாக விவரிக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை சேட்ஜிபிடி செயலியில் பதிவேற்றினார்.
பின்னர், கோவில் வாசலில் குவிந்துகிடந்த காலணிகளின் குவியலையும் ஒரு காணொளியாகப் பதிவு செய்து சேட்ஜிபிடியில் பதிவேற்றினார்.
பின்னர், தனது காலணி எங்கே இருக்கிறது? என இளையர் கேள்வி எழுப்ப, அவரது காணொளியைச் சில வினாடிகளில் விரிவாகப் பகுப்பாய்வு செய்த சேட்ஜிபிடி, இளையர் அளித்த பழைய புகைப்படத்துடன் ஒப்பீடு செய்து, காலணி இருக்கும் சரியான இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. சேட்ஜிபிடி அடையாளப்படுத்திய இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அவரது காலணி அங்கே இருப்பது உறுதியானது.
நவீன தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைக்குப் பயன்படுத்தித் தீர்வு கண்ட அந்த இளையரின் அணுகுமுறை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.



