இந்த ஆண்டிற்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாத கருப்பொருளாக ‘எம்பவர் ஹர்’ (Empower Her) எனும் வாசகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இயக்கம் மார்பகப் பரிசோதனையை (Mammogram) ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஓர் அங்கமாக விளங்குகிறது.
2023 தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின்படி, கடந்த ஈராண்டுகளில், 50 முதல் 69 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் மாதர்களில், 34.7 விழுக்காட்டினர் மார்பகப் பரிசோதனைக்கு சென்றதாகத் தெரியவந்தது.
சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க மேற்கூறிய விகிதம் மூன்று விழுக்காடு குறைவு. மேற்கத்திய நாடுகளில் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வோர் விகிதம் 50 விழுக்காட்டுக்கும் 80 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கிறது.
மார்பகப் பரிசோதனைக்குச் செல்வோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் குறைவாக இருப்பதற்கு வலி மற்றும் நோய்க் கண்டறிதல் குறித்த பயம், ‘எல்லாம் நலமாகத்தான் உள்ளது’ என்ற நினைப்பில் பரிசோதனை குறித்து ஒருபோதும் நினைக்காத எண்ணம் உள்ளிட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
‘மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2024’ ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இணை உதவிப் பேராசிரியர் திருவாட்டி ஜூலியானா சென், “மார்பகப் புற்றுநோய் என்பது மகளிர் தனியாக மேற்கொள்ள வேண்டிய பயணமல்ல. அவர்களுக்கு துணிவூட்ட, அவர்களுடன் துணைநிற்க, மருத்துவ வல்லுநர்கள் தொடங்கி குடும்பம், நண்பர்கள் என வலுவான ஆதரவு அமைப்பு தேவைப்படுகிறது,” என்றார்.
இந்த ஆண்டின் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான மார்பகப் பரிசோதனை, மார்பக நலன் குறித்த:
- கருத்தரங்குகள்,
- பயிற்சிப் பயிலரங்குகள்
- சமூகத்தைச் சென்றடையும் நடவடிக்கைகள்
- இணையம்வழி விழிப்புணர்வு இயக்கங்கள்
உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைப்பதும் அவர்களிடையே சுயபராமரிப்பை மேம்படுத்த ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சிகளின் நோக்கம்.